Sunday, December 7, 2008

இலங்கை:தமிழக அரசியல் ஜோக்கர்கள் கோரிக்கையை காங்கிரஸ் செவிமடுக்காது

இலங்கை:தமிழக அரசியல் ஜோக்கர்கள் கோரிக்கையை காங்கிரஸ் செவிமடுக்காது

தமிழ்நாட்டு "அரசியல் ஜோக்கர்கள்" இலங்கையில் போரை நிறுத்துமாறு கோருவதை காங்கிரஸ் அரசாங்கம் செவிமடுக்காது என இலங்கையின் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தொழிக்க இந்தியா உதவி செய்ய வேண்டும் என, சிறீலங்காவின் தரைப்படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாக இந்தியா கரிசனை செலுத்துவதாகவும், இருப்பினும் தமது அரசும், படைகளும் பொதுமக்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார். கிழக்கை தாம் கைப்பற்றியபோது இதனை தாம் நிரூபித்திருப்பதாகத் தெரிவித்த சரத் பொன்சேகா, அதே உத்திகளைப் பயன்படுத்தியே தமது படைகள் வடக்கில் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் இதனால் பொதுமக்களுக்கு எந்தவித இழப்புக்களும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார்.

இந்திய அரசு தமிழ் மக்கள் என்ற மறுபக்கத்தை மட்டும் பார்க்கின்றது எனவும், இதனாலேயே உணவு போன்ற நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், இதனைவிடுத்து இந்தியா தமது பக்கத்தையும் பார்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ள இந்திய அரசு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படக்கூடாது என எண்ணும் என, தான் திடமாக நம்புவதாகவும் சிறீலங்காவின் தரைப்படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பின் இன்றைய ஆங்கில ஏடு ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார். வன்னியில் நாளாந்தம் நிகழ்த்தப்படும் வானூர்தி, மற்றும் எறிகணை போன்ற வான்வழித் தாக்குதல்களால் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருவதுடன், பொதுமக்கள் மீது கொத்தணிக் குண்டுகளும் வீசப்பட்டு, அதற்குரிய ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சரத் பொன்சேகா இவ்வாறு கருத்து வெளியிட்டிருப்பதாக, சுட்டிக்காட்டுகின்றனர்.

வாழ்க கலைஞர், வாழ்க தமிழகம், வாழ்க இந்தியா

2 comments:

தமிழ் சசி | Tamil SASI said...

பொன்சேகா மிகச் சரியாக சொல்லியிருக்கிறார். இந்த விடயத்தில் நான் பொன்சேகாவை ஆதரிக்கிறேன். கலைஞரும் மற்ற காங்கிரஸ் ஆதரவு தமிழக தலைவர்களும் அடித்த கூத்துகள் திரைப்பட காமெடிகளை விட சிரிப்பை வரவழைத்தது. வேதனையாகவும் இருந்தது. இவர் இங்கிருந்து டெல்லி போவதும், உடனே பிரணாப் கொழும்பு போவதும், பிறகு திரும்பி வந்து ஏதோ சொல்வதும், தனக்கு முழு திருப்தி ஏற்பட்டு விட்டது என்பது போல கருணாநிதி கூறுவதும் சகிக்க முடியவில்லை.

தற்பொழுது பொன்சேகா மன்னிப்பு கேட்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறார். பொன்சேகா மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் சரியாகவே கூறியிருக்கிறார்.

தமிழக தலைவர்கள் முதலில் அறிக்கை விடுவதை மூட்டை கட்டி வைத்து விட்டு தங்களுடைய எம்.பி. பதவிகளை உதறி தள்ள வேண்டும். மைய அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும். அதைச் செய்யாமல் இருந்தால் பொன்சேகா கூறுவது போல இவர்கள் எல்லாம் ஜோக்கர்கள் தான்.

பொன்சேகாவின் கருத்து மிகச் சரியானது.

மாயாவி said...

நீங்கள் சொல்வது சரிதான்.
இப்பொழுது சரத்பொன்சேகாவை மன்னிப்பு கேட்கச் சொல்லி தமிழக அரசியல் தலைவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஒருவேளை சரத்பொன்சேகா மன்னிப்பு கேட்டால் இவர்கள் கோமாளிகள் என்பது மாறிவிடுமா என்றுதான் தெரியவில்லை!!